அணுஆயுத நாட்டுடன் போர் மூலம் தீர்வு கொண்டே வர முடியாது அழிவை மட்டும்தான் கொண்டு வர முடியும்.
Not allow reviews
Descriptions
என்று வந்து விட்டால் யாரோ ஒருவருக்கு தோல்வி நிச்சயம். ஆனால் தோற்கப்போகறவர் தோல்வியை சகித்துக்கொண்டிருக்க மாட்டார். தோற்கப்போகிறோம் என்ற உணர்வு வந்த உடனேயே அணு ஆயுதத்தை எடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள். அது நடந்ததும் மற்றொருவரும் அணு ஆயுத பிரயோகத்தை தவிர்க்க முடியாமல் செய்து விடுவார்.
இது முடிந்ததும் இரு நாடுகளிலும் அனைத்து தலைவர்களும் நலமாக இருப்பர். கோடிக்கணக்கான மக்கள் மட்டும்தான் அடுத்த 60 ஆண்டுகளுக்கு அணு கதிர்வீச்சை உள்வாங்கிக்கொண்டு காண சகிக்காத காட்சிகளோடு நாட்களை கடத்த வேண்டும்.
அதற்காக தீவிரவாதத்தை அனுமதிப்பதா?
தீவிரவாதத்தை எந்த நாட்டு மக்களும் அனுமதிப்பதில்லை.
விரும்புவதும் இல்லை.
ஆனால் எல்லா காலத்திலும் தீவிரவாதம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. கையில் உள்ள ஆயுதம் காலத்திற்கேற்ப முன்னேறி இருப்பதுதான் வித்தியாசம்.
உலகம் முழுக்க கோபமான மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நீதியும் சமத்துவமும் ஒவ்வொரு பகுதியிலும் நிலவும் வரை கோபமான மனிதர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.
கோபமான மனிதர்களுக்கு நியாயம் கிடைப்பதற்கான வழி முறையை ஒவ்வொரு அரசாங்கமும் முனைந்து ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
அகிம்சை வழி கோரிக்கைகளுக்கு செவி மடுத்தல். மக்களுடன் பிரச்சனைகளை
சுலபமாக அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தும் வாய்ப்பை அனைவருக்கும் ஏற்படுத்துதல்,
தவறான புரிதலுடன் மக்கள் இருந்தால் அந்த புரிதலை சரிசெய்ய தொண்டு நிறுவனங்கள் ஊடகங்கள் மூலம் புரிய வைத்தல், ஆயுத மாஃபியாக்கள் பற்றிய புரிதலை ஏற்படுத்துதல் அகிம்சை மீதான நம்பிக்கையை விதைத்தல் போன்றன.
மிக முக்கியமாக வேற்றுமை பாராட்ட சொல்லித்தராமல் இருப்பது. மதமோ இனமோ மொழியோ ஜாதியோ வைத்து அரசியல்காரணங்களுக்காக பிரித்தாளும் சூழ்ச்சி செய்வது பல சமயங்களில் வன்முறையை தீவிரவாதத்தை வளர்த்து விடுகிறது. வேற்றுமை வளர்ப்பும் வன்முறையும் கைகோர்த்தே செல்கின்றன.
இதை எல்லாம் செய்ய வெகு காலம் பிடிக்கலாம். அதுவரை வன்முறையில் ஈடுபடும் கோபமான மனிதர்களும் அமைப்புக்களும் நாடுகளும் உலகம் முழுக்க இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் வன்முறை செய்வதற்கு அனுதினமும் சிறியதும் பெரியதுமாக முயற்சி செய்து கொண்டேதான் இருக்கிறார்கள். பின் எப்படி உலகில் பெரும்பாலான மக்கள் அமைதியாக வாழ்கிறார்கள்?
பாதுகாப்பு ஏற்பாடுகளை நம்பித்தான்!!
அதனாலேயே தேச பாதுகாப்புக்கான செலவு தலையாய செலவாக எல்லா நாட்டிலும் பார்க்கப்படுகிறது.
அதனால்
பாதுகாப்புத் தொய்வு, Security Lapse, என்பது அனுமதிக்கவே முடியாததாக இருக்க வேண்டும். யார் பாதுகாப்பு தொய்விற்கு காரணமாக இருக்கிறார்களோ அவர்கள் உடனடியாக அடையாளப்படுத்தப்பட்டு கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
பொறுப்புடைத்தன்மை மிகச்சீராக இருப்பது அவசியம்.
புல்வாமா துயர நிகழ்வில் ஒரு தீவிரவாதி 2700 ராணுவ வீரர்கள் இருக்கும் இடத்திற்கு 350 கிலோ வெடிப் பொருளை எடுத்து வருகையில் எங்குமே ஒரு மெட்டல் டிடெக்டர் அலாரம் கூட அடித்ததாக தெரியவில்லை. சோதனைச்சாவடிகளின் சோதனை எந்த அளவில் இருந்தது இது எல்லாம் நிச்சயம் பாதுகாப்புத் தொய்வுதானே தவிர வேறு எதுவும் இல்லை. நமது
பாதுகாப்புத் தொய்வுகளை இன்னொரு நாட்டுடன் போருக்கு போய் சரி செய்ய முடியாது.
எத்தனை போர் தொடுத்தாலும் போரால் மட்டுமே முழுமையாக தீவிரவாதத்தை நிறுத்தவும் முடியாது. எளிய மக்கள் மனதில் இடம் பிடிக்காமல், எளிய மக்கள் நம்பிக்கையைப் பெறாமல் சம்பந்தப்பட்ட பகுதியில் தீவிரவாதத்தை முழுமையாக தடுத்து நிறுத்தவே முடியாது.
இன்று வரை புல்வாமா தாக்குதலை அனுமதித்த பாதுகாப்பு தொய்வு எங்கு எப்படி எல்லாம் நடந்திருக்கிறது, ஒவ்வொரு இடத்திலும் இவர்தான் கவனக்குறைவாக இருந்திருக்கிறார் என்ற அறிக்கை வரவே இல்லை.
ஒரு அணு ஆயுதம் வைத்திருக்கும் நாட்டில் கைவைக்கும் முன் இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருக்க வேண்டும். சொந்த நாட்டிற்கு குந்தகம் செய்த அந்த பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக தண்டனைக்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
அதெல்லாம் ராணுவ ரகசியம், அல்ல. எத்தனையோ முறை இது போன்ற செயலுக்காக பலர் ஊரறிய கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களே தேச துரோகிகள்.
கண்காணிப்பு கேமராக்கள் உட்பட பல நவீன வசதிகள் இன்று இருப்பதால் Security lapse க்கு காரணமானவர்களை கண்டுபிடிப்பதில் தாமதம் இருக்கவே கூடாது.
மொத்தத்தில் நாம் நம் வலுவான பாதுகாப்பு கட்டமைப்பை நம்பிதான் தூங்க வேண்டுமே ஒழிய,
எதிரிகளை எல்லாம் அழிச்சாச்சு என்று நம்பி தூங்கும் நாள் எந்த நாட்டுக்கும் என்றைக்கும் வராது.
அணுஆயுத நாட்டுடன் போர் மூலம் தீர்வு கொண்டே வர முடியாது அழிவை மட்டும்தான் கொண்டு வர முடியும்.