அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ள முசலி வீட்டுத்திட்டம் - முசலி புத்திஜீவிகள் கவலை
Descriptions
முசலி புத்திஜீவிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
முசலியில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வீட்டுத்திட்டம் அரசியல் செல்வாக்கு மிக்கதாக காணப்படுவதாகிறது.
வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவில் குறித்த ஒரு அரசியல் கட்சியின் தலையீடும் பழிவாங்கும் நடவடிக்கைகளும் மிக அதிகமாக நடைபெற்றுள்ளதாக அறியமுடிகிறது.
2017 ஆம் ஆண்டு மீள்குடியேற்ற செயலனியால் வழங்கப்பட்ட 247 வீட்டுத்திட்டத்தை அர்ப்ப சொற்ப இலாபங்களுக்காக, நோக்கங்களுக்காக இடைநிறுத்தம் செய்து 500 வீடுகளாக தற்போது வழங்கப்பட்டாலும், 247 வீட்டுத்திட்டதில் உள்வாங்கப்பட்ட பயனாளிகள் சில கிராமங்களில் திட்டமிட்டு மீளவும் சேர்த்துக்கொள்ளப்படாது இல்லாமலாக்கப்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும் புதிதாக தற்போது 200 வீடுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த பயனாளிகள் தெரிவிலும் 100% அரசியல் செல்வாக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. மீள்குடியேறிய மக்கள் இவ்வாறான பழிவாங்குதல்களுக்கு உட்படுத்தப்படுவது பாரிய அநீதியாகும் என அவ்வறிக்கயில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இத்தகைய அரசியல் ஓரவஞ்சகமும், பழிவாங்குதல்களும் அதிகரித்துள்ள சூழலில் படித்தவர்கள் மீளக்குடியேறுவது குறித்து யோசித்துவருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இது குறித்து சமூக சிந்தனையாளரும், ஆசிரியருமான திரு. அப்துல் சாஸஹிர் அவர்கள் தனது தந்தைக்கு வழங்கப்பட்ட வீட்டுத்திட்டம் இடைநிறுத்தப்படமை தொடர்பாக கூறியதாவது:
முசலியில் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது. இதனை பல வழிகளிலும் வெளிக்கொண்டு வர வேண்டும் என எடுத்த முயற்சிகள் இது வரை வெற்றியளிக்கவில்லை என்பதை நினைக்கும் போது மிகவும் மனம் வேதனையடைகிறது.
மக்கள் பிரதிநிதிகளும் எந்த அக்கறையும் கொள்ளவில்லை.
இதன் ஒரு கட்டமாக, எனது தந்தைக்காக வழங்கப்பட்ட வீட்டுத்திட்டமானது பல தடவைகள் உள்வாங்கி தற்போது பெயர் நீக்கப்பட்டுள்ளது. தற்போது அது மனித உரிமைகள் ஆணையம் வரை சென்றுள்ளது.
இது இவ்வாறிருக்க, மஸ்தான் பிரதியமைச்சர் கூட இவ்விடயம் தொடர்பில் தனக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டை எவ்வாறு கையாண்டார் என விளக்குவது எனது கடமை என நினைக்கிறேன்.
இம்முறை வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் எனது தந்தையின் நீக்கப்பட்டமைக்கான கடிதப் பிரதி ஒன்றை 20/08/2018அன்று கௌரவ பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் அவர்களுக்கும் அனுப்பி வைத்தேன்.இக்கடிதம் அவருக்கு அனுப்பியதற்கும் அவரிடம் இருந்து சாதகமான பதிலை எதிர்பார்ப்பதற்கும் பின் வரும் காரணம் முக்கியமான விடயமாகும்.
1) அவர் எமது பிரதேசத்தின் வாக்குகளையும் பெற்றே பாராளுமன்றம் சென்றவர்.
2) தனிப்பட்ட முறையில் நான் அவருக்கு நன்கு அறியப்பட்ட ஒருவன்.பல தடவைகள் எனது வீட்டிற்கே வந்து என்னை கண்ணியம் படுத்திய மதிப்பிற்குரியவர்.
3) மீள் குடியேற்ற அமைச்சின் பிரதி அமைச்சர்.
4) எல்லா வற்றையும் விட மனிதாபிமான அடிப்படையில் இக்கடிதத்திற்கு பதிலளிக்க வேண்டும்.
இருந்தும் இதுவரை அவரிற்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு எவ்வித பதிலும் இல்லை.பல முறை தொலைபேசி அழைப்பு விடுத்தும் சரியான முறையில் பதிலளிக்க வில்லை.இதை நான் ஏன் திறந்த அரங்கில் எழுதுகிறேன் என்றால் மக்களின் அழைப்புக்கு, தேவைக்கு மதிப்பளிக்காதவரை நாமும் அடையாளம் காண வேண்டும் என்பதாகும்.
பயனாளிகள் தேர்வில் பதிலில்லை, வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை, பிள்ளைகள் இங்கு படிக்கவில்லை.இவ்வாறான பல நபர்கள் நாலாம் கட்டை முதல் மறிச்சிக்கட்டி வரை உள்வாங்கப்பட்டு இருக்கிறார்கள்.
தனி நபர் செல்வாக்கு பிரதேச செயலகத்தை ஆட்கொண்டு விட்டது.மக்கள் பிரதிநிதிகளும் இவ்வாறென்றால் பாமர மக்கள் நிலை என்னவாகும்.
எது எப்படியோ! இதை எழுதும் போது முறைப்பாட்டாளரான எனது தந்தை உயிருடன் இல்லை.நானும் எனது மண்ணில் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன்.என்னைப்போன்ற பலர் முசலி யின் அரசியல், நிருவாக முதலைகளிடம் சிக்கிக் கொண்டு தவிக்கின்றனர்.