Descriptions
சுதந்திர ஊடகங்கள் ஜனநாயகத்தின் முக்கிய தூண்களில் ஒன்றாகும். சில நாடுகளை போல அரசியல் கட்சிகளுக்கு வெளிப்படையாகவே பிரச்சாரம் செய்யும் பிரத்தியோகமான தனியார் ஊடக கலாச்சாரம் இலங்கையில் இல்லை. “நடுநிலை” ஊடகங்கள் என்று தங்களை பிரச்சாரம் செய்யும் தனியார் ஊடகங்கள் அல்லது அவற்றின் உரிமையாளர்கள் ஏதாவது ஒரு குறித்த அரசியல் கட்சியின் நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவளிக்கும் தன்மை அதிகமாகவே தற்போது உணரப்பட்டுவருகிறது. அந்தவகையில் இலங்கையில் இயங்கும் ஊடகங்களின் பின்னணிகளை தெரிந்துகொள்வது அவசியமாகிறது.
▶️அரச ஊடகங்கள்
ரூபவாகினி, ITN, Eye Channel, Vasantham TV, Daily News, Sunday Observer, தினகரன், சிலுமின போன்றவற்றுடன் பல ரேடியோ அலைவரிசைகளையும் கொண்டவை. இவை பொதுவாக ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்திற்கு ஆதரவாகவும் எதிர்கட்சிகளுக்கு எதிரான நிலைப்பாட்டுடனும் இயங்குபவை.
▶️MTV ஊடக வலையமைப்பு
கில்லி மகராஜா என்று அழைக்கப்படும் ராஜமகேந்திரனுக்கு சொந்தமான கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் ஊடகங்களான சிரச, சக்தி டிவி மற்றும் ரேடியோக்களுடன் TV 1, Yes FM போன்றவற்றையும் உள்ளடக்கியவை. ஐதேக கட்சிக்கு ஆதரவான ஊடகமாக பொதுவாக அறியப்பட்ட இந்த ஊடகங்கள் பலமுறை தாக்குதலுக்கும் உள்ளாகியிருக்கிறது. மகாராஜாவுக்கு ஊடக குறிக்கோள் இருப்பதைப்போல அரசியல் நோக்கங்களும் இருக்கின்றன. அந்த அரசியல் நோக்கங்களை அடைவதற்காக பல அரசியல்வாதிகள் மகாராஜாவால் உருவாக்கப்பட்டார்கள் அல்லது இருக்கும் அரசியல்வாதிகளுக்கு முழுமையான பண அல்லது ஊடக ஆதரவினை வழங்கிவருகிறார்கள். உதாரணமாக சஜித் பிரேமதாச, மிலிந்த மொரகொட, மரிக்கார், புத்திக பத்திரன, சுசார டினால், சுஜீவ சேனசிங்க, ரங்கா, சுசில் கண்டல்பிட்டிய, அசாத் சாலி, பசீர் சேகு தாவூத் போன்றோரை குறிப்பிடலாம்.
ஐதேக மீது பலமான முதலீடு செய்திருக்கும் மகாராஜா, ஐதேக தனது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயல்படவேண்டும் என்ற எண்ணத்தை கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து , பின்னர் மாகாண சபை முதல் உள்ளூராட்சி மன்றம் வரை தனக்கு விசுவாசமானவர்களை புகுத்துவதற்கு எத்தனித்த போது ரணில் விக்ரமசிங்க அதி இலகுவில் விட்டுக்கொடுக்கவில்லை. இதனால் ஏற்பட்ட முரண்பாடுகளை அடுத்து முழு மூச்சாக ரணில் விக்ரமசிங்கவை அகற்றும் பிரச்சார பணியை செய்துவருகிறார்கள்.
ஒரு காலத்தில் முன்னணியில் இருந்த இந்த ஊடகங்கள் விமர்சனம் என்ற பெயரில் ஊடக தர்மத்தின் எல்லைகளை மீறி செயல்படுவதால், மக்களின் அபிமானத்தை இழந்திருக்கிறார்கள். ஐதேகவுக்கு அல்லது ரணிலுக்கு எதிரானவர்கள் கூட முகம் சுளிக்கும் வகையில் இந்த ஊடகங்களை தவிர்த்து வருவது பொதுவாக அறியப்பட்ட ஒன்று. ரணில் விக்ரமசிங்கவுக்கு மேலதிகமாக தமிழ் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், ரிஷாத் பதியுதீன் போன்றோருக்கும் எதிரான நிகழ்ச்சி நிரலை கொண்டிருக்கிறார்கள். தற்போதைய நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், சஜித் பிறேமதாசவுக்குக்கும் முழுமையான ஆதரவை வழங்கிவருகின்றார்கள். அதாவது எதோ ஒரு வகையில் ஜனாதிபதி அல்லது அடுத்த முக்கிய தலைமைத்துவத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
▶️தெரண
திலித் ஜெயவீர மற்றும் சரத் அமுனுகவின் மகளான வருணி அமுனுகமவிற்கு சொந்தமான ஊடகங்கள். இந்த இருவரும் பல்கலைக்கழக காலம் முதல் நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள். இவர்களுடன் இன்னுமொரு நண்பரும் இணைந்து TriAd எனப்படும் Advertisement Company ஒன்றை ஆரம்பித்து பின்னர் அதனூடாக தெரண தொலைக்காட்சியை உருவாக்கினார்கள். Derana TV, FM Derana எனப்படும் ரேடியோவுடன் அருண எனப்படும் சிங்கள மற்றும் The Morning எனப்படும் ஆங்கில பத்திரிகையையும் உருவாக்கியிருக்கிறார்கள்.
ஆரம்பத்தில் சிறியதாக இருந்தாலும் நடுநிலை ஊடகமாக அறியப்பட்ட தெரண, பின்னர் கோதபாய ராஜபக்சவின் முதலீடுகள் மூலமே பெரும் நிறுவனமாக மாற்றப்பட்டதாக நம்பப்படுகிறது. அதனால் அடுத்த ஜனாதிபதியாக கோத்தபாயவை உருவாக்கவேண்டும் என்ற அடிப்படையில் பொதுஜன பெரமுனவிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பிரச்சாரம் செய்துவருகிறார்கள்.
▶️ABC ஊடகங்க வலையமைப்பு
துமிந்த சில்வாவின் சகோதரரான ரய்னோர் சில்வாவுக்கு சொந்தமான ABC நிறுவனத்திற்கு சொந்தமாக Hiru TV, Hiru FM, சூரியன் FM, Gold FM, Sun FM மற்றும் Shaa FM போன்ற தொலைக்காட்சி மற்றும் ரேடியோ அலைவரிசைகள் இருக்கின்றன. ஆரம்பத்தில் நடுநிலையாக இருந்த போதிலும் இந்த ஊடகங்கள் துமிந்த சில்வாக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை பிரசுரித்து வந்திருந்தன. எனினும் பாரத லஷ்மன் கொலைவழக்கில் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதன் பின்னர், அவரை விடுவிக்கும் நோக்கில் மஹிந்த ராஜபக்சவிற்கு பக்க்கச்சார்பாக பிரச்சாரங்களில் முக்கியத்துவம் கொடுத்து இயங்கி வருகிறார்கள்.
▶️TNL
ரணில் விக்ரமசிங்கவின் சகோதரான ஷான் விக்ரமசிங்கவிற்கு சொந்தமான தொலைக்காட்சி மற்றும் ரேடியோ. எந்த சந்தப்பத்திலும் ஐதேகவிற்கும் ரணில் விக்ரமசிங்கவிற்கும் பக்காசார்பாக இயங்கும் இவை அதிக பார்வையாளர்களை ஈர்க்க கூடிய தொலைக்காட்சியாக அறியப்படவில்லை. என்றாலும் ஏனைய தொலைக்காட்சிகளில் தற்போது நட்சத்திர அரசியல் அறிவிப்பாளர்களாக இருக்கும் பலரின் ஆரம்பம் TNL தொலைக்காட்சியே ஆகும்.
▶️சுவர்ணவாகினி
சோமா எதிரிசிங்கவின் EAP நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட சுவர்ணவாகினி மற்றும் ஸ்ரீ FM, Ran FM, E FM போன்றவை. மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் மகிந்தவுக்கு ஓரளவு சார்பாக இயங்குவதாக சொல்லப்பட்டாலும் நடுநிலைமையாக இயங்குவதை அவதானிக்ககூடியதாக இருந்தது. பின்னர் EAP நிறுவனத்திற்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக விற்பனைக்கு விடப்பட்ட இந்த நிறுவனத்தை மத்திய வங்கி ஊழலில் தொடர்புபட்ட அர்ஜுன் அலோசியஸ் கொள்வனவு செய்திருப்பதாக பொதுஜன பெரமுன அணியினர் குற்றம்சாட்டி வந்தனர். பின்னர் புலம்பெயர் தமிழரான ஞானம் சுபாகரனுக்கு சொந்தமான Lyca நிறுவனம் கொள்வனவு செய்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. கடந்த காலங்களில் சுபாகரன் நாமல் ராஜபக்சவிற்கு நெருக்கமானவர் என்றும் அறியப்பட்டிருக்கிறார்.
▶️சியத TV
சிங்கள சினிமா நடிகையான சங்கீதாவின் கணவரான ரோஷந்த காரியபெருமவினால் உருவாக்கப்பட்ட இந்த ஊடக வலையமைப்பில் Siyatha TV, Siyatha FM, Varnam TV, Varnam FM போன்றவை உள்ளடங்குகின்றன. மிகப்பெரும் நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இந்த நிறுவனத்தின் உரிமை பலமுறை மாற்றப்பட்டிருக்கிறது. ஒரு முஸ்லிம் அமைச்சரினால் கொள்வனவு செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டது பின்னர் அர்ஜூன் அலோசியஸ் கொள்வனவு செய்திருப்பதாகவும் கிசு கிசுக்கப்படது. இதனால் தற்போதைய உரிமையாளர் யார் என்பாத்து தெளிவில்லாமல் இருக்கிறது. தற்போதைய நிலையில் எந்தவொரு கட்சிக்கும் பக்கச்சார்பற்ற வகையில் நடுநிலையாக செய்திகளை ஒலி/ஒளி பரப்பிவருகின்றார்கள்.
▶️Uthanayam TV ( UTV)
முன்னாள் அமைச்சரும் ACMC கட்சியின் தலைவருமான ரிசாத் பதியுதீனுக்கு சொந்தமானது. செய்திகளில் ரிஷாத் பதியுதீனுக்கு முக்கியத்துவம் கொடுத்துவருகின்ற போதிலும், மக்கள் நலன்சார் நிகழ்ச்சிகளை செய்வதற்கு முயற்சிகளை செய்துவருவது பாராட்டுக்குரியது.
▶️தேசிய பத்திரிகைகள்
ரணில் விக்ரமசிங்கவின் தாயாரால் உருவாக்கப்பட்ட விஜய நிறுவனத்திற்கு சொந்தமான பத்திரிகைகளான லங்காதீப, அத, Sunday Times , Daily Mirror போன்றவை பெரும்பாலும் நடுநிலையாக செயல்பட்டுவருகின்றன.
முன்னாள் அமைச்சர் குமார் வெல்கமவின் சகோதரருக்கு சொந்தமான உபாலி நிறுவனத்தின் பத்திரிகைகள் The Island மற்றும் திவயின போன்றவைகளாகும்.
ஒரு காலத்தில் ஐதேகவின் நம்பிக்கைக்குரிய உறுப்பினராக இருந்து பின்னர் சரத் பொன்சேக்காவுடன் இணைந்து தற்போது மகிந்தவுக்கு தலையையும் சஜித் பிரேமதாசவுக்கு வாலையும் காட்டி கொண்டிருக்கும் டிரான் அலசுக்கு சொந்தமான பத்திரிகைகள் “லக்பிம” மற்றும் The Nation போன்றவை.
கொழும்பு பாராளுமன்ற உறுப்பினரம் இலங்கை கிரிக்கட் சபையின் தலைவராக பலமுறை செயற்பட்டவருமான திலங்க சுமதிபாலவிற்கு சொந்தமான பத்திரிகை “ மவ்பிம”
இதற்கு மேலதிகமாக இலங்கையில் இயங்கும் ஆங்கில, சிங்கள, தமிழ் மொழியிலான இணைய செய்தி தளங்களிற்கும் ஒரு குறித்த அரசியல் கட்சி அல்லது அரசியல்வாதிக்கு சார்பான அரசியல் பின்னணிகள் இருக்கவே செய்கின்றன.