சிறுவர்களுக்கு பாதுகாப்பான தேசத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைவோம் - ஜனாதிபதி
Not allow reviews
Descriptions
தேசத்தின் எதிர்காலமான சிறுவர்களுக்கு பாதுகாப்பான தேசத்தை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் கூட்டாக பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டுமென்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்கவும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் நேற்று இடம்பெற்ற 'சிறுவர்களைப் பாதுகாப்போம்' தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் பொலன்னறுவை மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
சமூகத்தில் தற்போது பரவியுள்ள பல்வேறு சீரழிவுகளிலிருந்து சிறுவர்களைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளித்து துஷ்பிரயோகங்களைத் தடுத்தல், பாதுகாப்பை உறுதி செய்தல், சுகாதார போசனை, ஆளுமைவிருத்தி கல்வி மற்றும் வாழ்க்கைத் திறனை மேம்படுத்தல் ஆகிய துறைகளில் சிறுவர்களைப் பாதுகாக்கும் நோக்குடன் 'சிறுவர்களைப் பாதுகாப்போம்' நிகழ்ச்சித்தித்திட்டம் ஜனாதிபதி அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிகழ்ச்சித் திட்டமாகும்.
பாடசாலைகள், வீதிகள், வீடுகள் உள்ளிட்ட முழு சமூக சூழலும் பிள்ளைகளுக்கு பாதுகாப்பான இடங்களாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, சிறுவர்களின் நடத்தைகளை விளங்கிக்கொண்டு வளர்ந்தவர்கள் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதுடன், வெளிச் சூழலில் காணுகின்ற விடயங்களை வைத்து தீர்மானங்களை மேற்கொள்ளாது அவர்கள் உள்ளார்ந்த ரீதியாக முகம்கொடுத்துள்ள உள, உடல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் தொடர்பாக கண்டறிய வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
'சிறுவர்களை பாதுகாப்போம்' தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்துவது அரசாங்கத்தின் நோக்கமாகும் என்பதுடன், இதற்காக மூன்றாண்டு திட்டத்திற்காக 524 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்கு அனைத்து அரசாங்க அதிகாரிகளும் குறித்த நிறுவனங்களுடன் இணைந்து பொறுப்புடன் செயற்படுவார்களென தான் நம்புவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டின் பொதுச் சட்டங்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு குறித்து உள்ள சட்ட நிலைமை தொடர்பில் பாடசாலை மற்றும் கிராமிய மட்டத்தில் சிறுவர்களுக்கு அறிவூட்டுவதற்கு சட்டத்தரணிகளைக் கொண்ட குழுவொன்றை நாடெங்கிலும் ஈடுபடுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
'சிறுவர்களே உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள்' என்ற கருப்பொருளின் கீழ் மகளிர் சிறுவர் விவகார அமைச்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த மாவட்டத்தில் சிறுவர் இல்லங்களில் உள்ள சிறுவர்களுக்கு சிறந்த சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகத் தெரிவு செய்யப்பட்ட ஐந்து சிறுவர் இல்லங்களை நவீனமயப்படுத்தி புனர்நிர்மாணம் செய்தல், சிறுநீரக நோய் ஆபத்திலிருந்து சிறுவர்களைப் பாதுகாப்பதற்கு சுத்தமான குடிநீர் வசதிகள் இல்லாத 20 பாடசாலைகளுக்கு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்குதல், பேண்தகு பாடசாலை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 381 பாடசாலைகளில் ஒரு பாடசாலைக்கு 50,000 ரூபாவீதம் நிதி வழங்குதல், சிறுவர்களை நல்ல சுகாதார பழக்கவழக்கங்களுக்கு பழக்கப்படுத்துவதற்குத் தேவையான உபகரணங்களை வழங்குதல், அங்கவீனமுற்ற பாடசாலை சிறுவர்களுக்கு சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல்கள், மூக்குக்கண்ணாடிகள் ஆகியவற்றை வழங்குதல் மற்றும் தெரிவு செய்யப்பட்ட 45 முன்பள்ளி பாடசாலைகளுக்குத் தேவையான வசதிகளை வழங்குதல் போன்ற நிகழ்ச்சித்திட்டங்கள் இதன்போது ஆரம்பித்து வைக்கப்பட்டன.
ஜயிக்கா நிறுவனத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை ஜனாதிபதி இதன்போது வழங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் வட மத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரத்ன உள்ளிட்ட மாகாண சபை பிரதிநிதிகள், அமைச்சின் செயலாளர்கள், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஹண கீர்த்தி திசாநாயக்க உள்ளிட்ட அதிகாரிகள், பொலன்னறுவை ரோயல் கல்லூரியின் அதிபர் ரவிலால் விஜயவங்ச உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
(news.lk)