Descriptions
பிரதேச சபையின் தவிசாளர் பதவி ஒரு வருடத்தின் பின்னர் எனக்குரியது என 2018.04.11 ஆம் திகதி பி.ப. 2.25 மணியளவில் ஓர் உடன்பாடு காணப்பட்டிருந்தது.
தற்போது ஒரு வருடம் நிறைவு பெற்றுள்ளது. அதற்காக அந்தப் பதவியை நான் எதிர்பார்த்திருந்ததாக அர்த்தமில்லை.
இதுகுறித்து எனக்கு வாக்களித்த மக்கள் உட்பட அக்கறை கொண்ட பலரும் என்னிடம் தொடர்ந்து வினவி வருவதால் ஒரு தெளிவுக்காக இந்தப் பதிவை இடுகிறேன்.
இந்த விடயம் குறித்து நான் பேசாமலிருப்பதற்கு இது என் வீட்டு விடயமல்ல, நான் உணர்வற்றவனுமல்ல. இப்பதிவு சமூகத்துக்கான ஒரு படிப்பினையாகலாம்.
சிலாவத்துறை வட்டாரத்தில் என்னைத் தேர்தலில் போட்டியிடும்படி 2017 டிசெம்பர் 19 ஆம் திகதி பகல் 12 மணியளவில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தொலைபேசி ஊடாக என்னைக் கேட்டுக் கொண்டார்.
எனக்குத் தவிசாளர் பதவி தருவதாகவும் தேர்தலுக்கு செலவளிப்பதாகவும் அவர் கூறியிருந்தார். எனினும் தேர்தலில் நிற்க நான் மறுத்து விட்டேன்.
ஒரு பாடசாலை ஆசிரியராகவும் மிகச்சிறிய மட்டத்திலான சமூக சேவகனாகவும் இருந்து விட விரும்புவதாகவும் நடைமுறை அரசியலில் ஆர்வமில்லை என்றும் கூறிவிட்டேன்.
எனினும் அமைச்சரினதும் ஊரின் சில முக்கியஸ்தர்களதும் தொடர் வேண்டுகோள் காரணமாக 2017 டிசெம்பர் 20 ஆம் திகதி மன்னார், கட்சி அலுவலகம் சென்று வேட்பு மனுவில் கைச்சாத்திட்டேன்.
அன்று பிற்பகல் சிலாவத்துறை பெரிய பள்ளிவாசல் வந்து அஸர் தொழுது அல்லாஹ்விடம் சில பொறுப்புக்களைச் சாட்டி துஆ செய்து விட்டு வீடு திரும்பினேன்.
2017 டிசெம்பர் 21 ஆம் திகதி வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் ஊரின் முக்கியஸ்தர்களை அழைத்து என் தேர்தல் வெற்றிக்கு ஆதரவு கேட்டேன்.
தவிசாளர் பதவியின் நிச்சயத் தன்மையை அமைச்சர் எமது முன்னிலையில் உறுதிப்படுத்த வேண்டும் அல்லது எழுத்து மூல ஆதாரம் வேண்டும் என்றனர். அமைச்சர் என்னிடம் வாக்குறுதி அளித்துள்ளதை நீங்கள் ஏற்றுக்கொண்டு எனக்கு ஆதரவு அளிக்கும்படி நான் உருக்கமாகக் கேட்டுக் கொண்டதை ஊர் முக்கியஸ்தர்கள் ஏற்றுக் கொண்டனர்.
அல்லாஹ்வின் ஏற்பாட்டில் என்கூடவே நின்ற ஊர் முக்கியஸ்தர்களின் அயராத முயற்சியால் அதிக மக்களின் ஆர்வமான வாக்களிப்பில் தேர்தலில் நான் வெற்றி பெற்றேன். அல்ஹம்துலில்லாஹ்.
அதன்பின்னர் தவிசாளர் பதவி குறித்த விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது. 'அமைச்சரின் வாகனத்திற்குள் 5 நிமிடங்கள்' என்ற எனது ஒரு வருடத்துக்கு முன்னைய பதிவொன்றில் இதுகுறித்து விபரித்துள்ளேன்.
ஒரு வருடத்தின் பின்னர் எனக்கு தவிசாளர் பதவி என்று உடன்பட்ட போதும் நிச்சயமாக அது நடக்கும் என்று அப்போதே நான் நம்பவில்லை, அதனை எதிர்பார்த்திருக்கவும் இல்லை. அது சாத்தியமுமில்லை. அதனை ஏற்க நான் தயாராகவும் இல்லை. ஏனென்றால் இது இஸ்லாம் அல்ல. இலங்கை அரசியல்.
என்னைப் பொறுத்த வரை முசலியின் முன்னைய 4 வருட சபை எஹ்யான் பாயினுடையது, தற்போதைய சபை சுப்யான் மாஸ்டருடையது. அவ்வளவுதான்.
ஆனால் தவிசாளர் பதவி இல்லா விட்டாலும் தவிசாளர் தெரிவு முடிந்த கையோடு பாரிய தேவையுடைய முசலி மக்களுக்கு கணிசமானளவு சேவை செய்யக்கூடிய வசதி வாய்ப்பை - ஏதேனும் ஒரு ஒழுங்கை எதிர்பார்த்திருந்தேன். ஆனால் அது ஒரு வருடமாகியும் சாத்தியப்படவில்லை. பதவி கேட்டுச் செல்வதை இஸ்லாம் விரும்பாததால் அதுகுறித்து நானும் அலட்டிக் கொள்ளவில்லை.
பிரதேச சபையைப் பொறுத்த வரை அதில் ஒரு குறிப்பிட்ட மட்டத்தில் தான் பணியாற்ற முடியும். அதிலும் சகல அதிகாரங்களும் தவிசாளருக்குரியது. மாதத்தில் ஒரு தடவை சபை கூடி சமூகப் பிரச்சினைகள், தேவைகள் குறித்து கலந்துரையாடி தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். தவிசாளர் தலைமையிலான உத்தியோகத்தர்கள் அதனை நடைமுறைப்படுத்த கடமைப்பட்டிருக்கிறார்கள். துணைத் தவிசாளர் என்ற வகையில் நல்ல விடயங்களில் தவிசாளருக்கு எனது ஒத்துழைப்பை வழங்கி வருகிறேன்.
1995 இல் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் நான் முதல் வருடத்தில் இருந்த போது அமைச்சர் ரிசாட் பதியுதீன் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் இறுதி வருடத்தில் இருந்தார். அப்போது ஏற்பட்ட நட்பு அவரது அரசியல் பயணத்தின் போது பெரியளவில் தொடராத போதிலும் வடக்கு முஸ்லிம் அரசியலில் அவரின் பொதுத் தேவைப்பாட்டை எல்லாக் காலமும் உணர்ந்து வந்திருக்கிறேன்.
2015 இல் எனது மீள்குடியேற்றத்தில் அவரின் வேண்டுகோளும் உதவியும் இருந்தது. அவரோடு காணப்பட்ட சில ஆரோக்கியமான உறவுகளால் 2018 தேர்தலில் களமிறங்க நிர்ப்பந்தமானேன். தேர்தலில் வெற்றி பெற்ற போதும் அதனோடு தொடர்பான நிதி நெருக்கடியிலிருந்து இன்னும் மீளவில்லை.
எனக்கு பதவி எல்லாம் ஒரு பொருட்டே அல்ல. சமூகத்துக்கு அதிகூடியளவு ஏதாவது நல்லது செய்ய நினைக்கிறேன். அதற்கான ஒரு சந்தர்ப்பமாக இந்த அரசியலையும் ஏற்றிருந்தேன். ஆனால் இதில் நிறைய நடைமுறைப் பிரச்சினைகள் உள்ளன.
எனினும் இதிலிருந்து உடனடியாக ஒதுங்கி கட்சிக்குள் நெருக்கடி நிலைக்கும் வாக்களித்த வட்டார மக்களின் பிரதிநிதித்துவ இழப்புக்கும் நான் காரணமாக விரும்பவில்லை.
மக்களின் வாக்குககளைப் பெற்ற ஒரு பொறுப்பு வாய்ந்த பிரதிநிதி என்ற வகையிலேயே சில விடயங்களை இங்கே பதிவிடுகிறேன். இவ்வெளிப்படைப் பதிவு மக்களுக்கு அவசியம் என்றும் எனது உரிமை என்றும் எண்ணுகின்றேன்.
வன்னியைப் பொறுத்தவரை அமைச்சர் ரிசாட் பதியுதீன் இருக்கும் காலமெல்லாம் அவர் கட்டாயம் ஒரு மக்கள் பிரதிநிதியாக இருக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அவர் முசலி மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்திக்கு பெரிதும் உதவியுள்ளார். ஆனாலும் முசலி தொடர்பான பிரச்சினை மற்றும் தேவை இன்னும் ஏராளம் உள்ளன.
முசலி உட்பட வன்னி மண்ணில் பல நற்பண்பு கொண்ட ஆளுமைகள் அரசியல் மற்றும் நிருவாக ரீதியில் உருவாக வேண்டிய தேவை இருக்கிறது. அவ்வாறானவர்கள் வெளித்தெரியும் போது சமூகம் அவர்களை எட்டி மிதித்து மட்டந்தட்டி விடாமல் அவர்களை தட்டிக் கொடுக்க வேண்டும்.
அரசியலில் நாம் வழங்கும் வாக்குறுதிகளும் அவற்றை மீறுதலும் அவ்வளவு இலேசான விடயங்களல்ல. நம் குறுகிய அரசியல் சிந்தனை நிச்சயம் ஒரு நாள் நம்மை பாழ்படுத்தி விடும். ஏனென்றால் அரசியல் பதவி மிகப்பெரிய ஒரு சமூக அமானிதம்.
சரியான இடத்தில் சரியானவர்களை அமர்த்த வேண்டிய பொறுப்பையும் அதிகாரத்தையும் மகாஜனங்களின் விரல் வரையும் வாக்கில் அல்லாஹ் வைத்திருக்கிறான்.
பதவி மூலம் சமூகத்துக்கு ஆற்ற வேண்டிய பணிகளை நாம் சரியாக நிறைவேற்றினோமா என்பதை கஷ்டப்பட்டு மக்களுக்கு விளம்பரப்படுத்தத் தேவையில்லை. மக்கள் தானாக விளங்கிக் கொள்வார்கள்.
சிறந்த அரசியல் கலாசாரத்தையும் உமரின் ஆட்சியையும் அவ்வப்போது நாம் ஞாபகப்படுத்தி சமூகத்துக்கு எத்தி வைப்போம். அப்போதுதான் அடுத்தடுத்த நம் சந்ததியும் அவற்றை மறக்காமல் நினைவுபடுத்தி வரும். அது என்றைக்காவது - எங்காவது நடைமுறைச் சாத்தியமாகலாம்.
சமூக முன்னேற்றத்திற்கு அரசியல் என்பது ஒரு வழிமுறை மாத்திரமே. வேறு ஏராளம் வழிமுறைகள் உள்ளன. இன்று நம் சமூகம் அரசியலை வாழ்க்கையாகவும் அதையே பிரதான வழிமுறையாகவும் கொண்டிருப்பது வேதனையானதும் மடைமைத்தனமுமாகும். இதுவொன்றும் றசூலுல்லாவின் அரசியலல்ல.
இன்றைய அரசியலில் ஏராளமான மறைமுக நிகழ்ச்சி நிரல்கள் உண்டு. கற்றவர்களே அவ்வளவு இலகுவாக உணர்ந்து கொள்ள முடியாத போது சாதாரண பாமரனின் நிலை ஜாஹிலிய்யத்துத்தான். அது ஈமானை இழக்கச் செய்துவிடும்.
நடைமுறை அரசியலில் உண்மைக்கும் நேர்மைக்கும் இடமிருப்பதில்லை. அது போலிகளின் புகலிடமாக இருக்கிறது. காக்க வைத்துக் காலங்கடத்தும். வெறுப்பினதும் அதிருப்தியினதும் உச்சிக்குக் கொண்டு போய்ச் சேர்க்கும்.
சமூக ஆளுமைகளைப் பயன்படுத்தத் தவறுதல், சமூக ஆளுமைகளை மழுங்கடித்தல், ஆகாததை ஆளுமை போல நிலைநிறுத்தல் என்பதெல்லாம் ஜாஹிலிய்யத்தின் தோற்றப்பாடுதான்.
கப்ரிலும் மறுமை நாளிலும் இடம்பெறும் விசாரணைகள் அல்லாஹ் தலைமையில் மிக மிக நீதியாகவும் நேர்மையாகவும் இடம்பெறும் போது அனைத்தும் வெளிச்சமாகும்.
முகுசீன் றயீசுத்தீன்
துணைத் தவிசாளர்
முசலி பிரதேச சபை