மக்கள் அலையும், அதன் உள்ளக அரசியல் பரிமாணங்களும், உமர் அல் பஷீரின் எதிர்காலமும்
Not allow reviews
Descriptions
- ஸகீ பௌஸ் -
சூடானுடைய பிரதான நகரங்கள் அனைத்தும் 'உமர் பஷீர் பதவி விலக வேண்டும்' என கோஷமிடுகின்றன. ஒவ்வொரு நாளும் எப்படியாவது ஆர்ப்பாட்டங்களில் பங்கு கொள்ள வேண்டும் என்பதும் சூடானியர்களுடைய அன்றாட வாழ்வில் ஓரங்கமாக மாறிவிட்டது. இவையனைத்தையும் வைத்து அரபு வசந்தத்தினுடைய சூடானிய அத்தியாயம் ஆரம்பித்து விட்டதா? என சில அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். மேலும் இதுவரை 25 பேர் ஆர்ப்பாட்டங்களின் போது கொல்லப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பு கூறும் அதேநேரம், 50 இற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமை குழுக்கள் தெரிவிக்கின்றன. காலனியத்திற்கு எதிரான மக்கள் புரட்சிகளுக்கு புகழ்பெற்ற மத்திய சூடான் நகரான அத்பராவிலே முதலாவதாக ஆர்;ப்பாட்டம் கருக் கொண்டது. ஆரம்பத்தில் பாண் விலை தீடிரென அதிகரிக்கப்பட்டதனை எதிர்த்தே மக்கள் வீதிக்கு இறங்கினார்கள். பின்பு, அது அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் பேரலையாக வடிவமெடுத்தது. அடுத்த ஓரிரு தினங்களுக்குள்ளேயே 'ஜனாதிபதி உமர்பஷீர் பதவி விலக வேண்டும்' என்ற கோஷமாக ஆர்ப்பாட்டத்தினுடைய பரிமாணம் மாறியது. அசாதரண சூழமையை கட்டுப்பாட்டுக்குல் கொண்டு வரும் நோக்கில் உணவுத் தட்டுப்பாட்டையும், பொருட்களது விலையேற்றத்தையும் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்தது. ஆனால், இம்முறை அத்தகைய அறிக்கைகளால் மக்களார்ப்பாட்டத்தை கட்டுப்பாட்டுக்குல் கொண்டு வர முடியவில்லை. இந்தப் பின்னணிலேயே, சூடான் அரசியல் ஆய்வாளரான பைஸல் முஹம்மத் ஸாலிஹ் 'கடந்த ஒரு தசாப்த காலமாக உமர் பஷீருடைய அரசாங்கம் பின்பற்றிய தவறான பொருளதாரக் கொள்கைகளுக்கும், அரச தரப்பின் எல்லைமீறிய ஊழல்களுக்கும் எதிரான மக்களெதிர்ப்பினதும், கோபத்தினதும் மொத்த வடிவமாகவே தற்போதெழுந்துள்ள மக்களார்ப்பாட்டங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்' என்கிறார்.இதே கருத்தை, பிரபல சூடானிய அரசியல் ஆய்வாளரான அப்துல் வஹ்ஹாப் அபந்தியும் வலியுறுத்துகிறார். அதாவது, 'உமர் பஷீர் மக்களின் பிரதான பிரச்சினைகள் என்ன? அதனை எவ்வாறு தீர்க்க முடியும்? என்ற விடயத்தில் இதுவரை எந்த அக்கரையையும் காட்டியதில்லை. மாறாக, தனது ஜனாதிப்பதவியை எவ்வாறு தக்கவைத்துக் கொள்ள முடியும். அதற்காக தனது கட்சிக்குள்ளும், அதனை ஆதரிக்கும் சூடான் இஸ்லாமிய இயக்கத்திற்குள்ளும் எந்த மாற்றங்களை செய்ய வேண்டும் என்பதே அவருடைய் ஓட்டுமொத்த இலக்காக இருந்தது. இத்தகைய உமர் பஷீரின் எதாச்சதிகார நடத்தைகளுக்கு எதிரான மக்கள் கோபமே தற்போது வெளிப்படுகிறது' என்கிறார் கலாநிதி அபந்தி.
இவைபோக, கடந்த சில மாதங்களாக வங்கிகளில் போதியளவு நிதியில்லை. அதில் தங்களது பணத்தை வைப்பிலிட்டவர்களுக்கு அதனைப் திருப்பிப் பெற முடியாது. அத்தியவசியப் பொருட்களில் விலையேற்றம் ஒரு புறமிருக்க, அவற்றை பெற்றுக் கொள்வதிலும் கஷ்டங்களை மக்கள் எதிர்கொள்கிறார்கள். எரிபொருள் விலை வேகமாக அதிரித்துச் செல்கிறது. நாட்டின் பண வீக்கம் 116 வீதத்தை அடைந்துள்ளது. டொலரொன்றுக்கு எதிரான சூடான் ஜூனைஹொன்றின் பெறுமதி 18 வீதத்திலிருந்து 52 வீதமாக அதிகரித்துள்ளன. இக்கட்டான நிலையில் தடுமாறும் ஒரு நோயாளியைக் கூட வைத்தியாசாலையில் அவசரமாக அனுமதிக்க முடியாது. இவ்வாறு, அன்றாட வாழ்வை கொண்டு நடாத்துவதற்கே முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டதன் பின்புதான் அரசாங்கத்திற்கு எதிரான அலையாக அது வடிவமெடுத்துள்ளன.
பலவீனமடையும் பொருளாதாரம் : கட்டமைப்பியல் பின்புலம்
2011 வது ஆண்டில் கார்டூம் தனது உத்தியோகபூர்வ நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதியை இழந்தது. காரணம், நீண்ட காலமாக சுயாட்சிக்காக போராடி வரும் தெற்கு சூடான் பிரிந்து தனிநாடாக தன்னை பிரகடனம் செய்து கொண்டமையாகும். மொத்த சூடானிலும் 75 வீதமான எண்ணை வளத்தை தெற்கு சூடானே கொண்டிருந்தன. மட்டுமன்றி, 2000 ஆம் ஆண்டு முதல் 2011 வரை சூடானுடைய மொத்த வருமானத்தையும், மொத்த செலவையும் தீர்மானிப்பதில் எண்ணை வருமானமே அடிப்படையாகவும் இருந்தது. விளைவாக, 2011 வது ஆண்டிலிருந்து அல்லது தெற்கு சூடான் பிரிந்து சென்றதிலிருந்து சூடானுடைய பொருளாதாரம் கொஞ்சம் கொஞ்சமாக பலவீனமடைய ஆரம்பித்தன. அதேநேரம், எண்ணை வருமானம் சூடானுடைய பொருளாத்தை பலப்படுத்திய 2000-2011 இடைப்பட்ட காலப்பகுதியில், கார்ட்டூம் தனது பொருளாதாரத்தை பன்முகப்படுத்துவதிலும், உள்நாட்டு உற்பத்திகளை அதிகரித்துக் கொள்வதற்கான செயற்திட்டங்கள் எதிலும் பாரிய அக்கறை காட்டவில்லை. எனவே, 2011 முதல் அல்லது 75 வீதமான எண்ணை வருமானத்தை பெற்றுக் கொள்வது தடைப்பட்டது முதல் வெளிநாட்டு நிதியைப் பெற்றுக் கொள்வதில் பாரிய சிக்கலை கார்டூம் எதிர்கொண்டது.. அதனோடிணைந்த வகையில், தனது மத்திய வங்கியின் நுகர்வு பலத்தை அதிகரித்துக் கொள்வதற்கான வெளிநாட்டுக் கடன்களை பெற்றுக் கொள்ளல் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதற்கான அரசின் முயற்சிகளும் தோல்வியடைந்தது. காரணம், 1997 ஆம் ஆண்டு முதல் சூடானின் மீது அமெரிக்கா விதித்திருந்த பொருளாதாரத் தடையானது, பலவீனமடைந்து செல்லும் மத்திய வங்கியின் நிதியியல் பலத்தை மீளவும் கட்டியெழுப்புவதற்கான எந்த கொள்கைத் தெரிவையும் அமுல் செய்ய முடியாத வகையில் சூடானிய அரசை முடக்கிப் பிடித்தது.
எண்ணைக்கு அடுத்த படியாக சூடானுடைய பொருளாதார பலத்தை தீர்மானிக்கும் அம்சம் தங்க ஏற்றுமதியாகும். 2017 வது ஆண்டு மொத்தமாக 90 டொன் தங்கத்தை சூடான் ஏற்றுமதி ச ஏற்றுமதி செய்திருக்கிறது. ஆனால், துரதிஷ்டவசமாக தங்க ஏற்றுமதிக்கூடாகவாவது பொருளாதார பலத்தை அதிகரித்துக் கொள்ளும் நிலையில் தற்போது சூடான் இல்லை. ஏனெனில், அதிகமான தங்க அகழ்வு நடவடிக்கைகளை தனியார் கம்பனிகளே மேற்கொள்கின்றன. அவற்றிடமிருந்து அகழந்த தங்கங்களை சூடான் மத்திய வங்கி வாங்குகிறது. பின்பு, அதனை சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்வதற்கூடாக வெளிநாட்டு நிதியை சூடான் மத்திய வங்கி பெற்றுக் கொள்கின்றன. கடந்த சில வருடங்களாக அக்கம்பனிகளிடமிருந்து தங்கங்களை நுகர்வதற்கான நிதிப் பலம் சூடான் மத்திய வங்கியிடம் இல்லாத நிலையில், அரசின் கட்டுப்பாட்டையும் மீறி கருப்புச் சந்தைக்கூடாக தங்க ஏற்றுமதி நடைபெற ஆரம்பித்திருக்கின்றன. அதேவேளை, மத்திய வங்கியின் நிதிப் பலம் தொடர்ந்தும் பலவீனமடைந்து கொண்டு செல்வதனை கட்டுப்படுத்தும் நோக்கில் உள்நாட்டில் பணச் சூழற்சியை கட்டுப்படுத்துவதற்கான தீர்மானத்தை அரசாங்கம் நிறைவேற்றியது. இதன் எதிர்வினையாக பொருளட்களின் விலையேற்றம் ஒரு புறம், வைப்பிலிட்ட பணத்தை பெற்றுக் கொள்ள முடியாது நிலை மறுபுறம் என்று பலவீனமடையும் மத்திய வங்கியை தூக்கி நிறுத்துவதற்கான அரசின முயற்சிகள் சூடான் மக்களை கடுமையாக பாதிக்க ஆரம்பித்தது. இதன் ஒட்டுமொத்த விளைவாகவே, கடந்த இருவது வருட வரலாற்றில் சூடான் பொருளாதாரமும், மத்திய வங்கியும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட ஆண்டாக 2018 ஆம் ஆண்டை பொருளியல் ஆய்வாளர்கள் அடையாப்படுத்துகிறார்கள். இவை சூடான் தற்போது எதிர்கொள்ளும் பொருளதார நெருக்கடி நிலையை தோற்றுவித்த கட்டமைப்பியல் காரணிகளாகும்.
சூடான் நெருக்கடியின் அரசியல் பரிமாணம்
பிரச்சினையினுடைய அரசியல் பரிமாணத்தைப் புரிந்து கொள்வதற்கு சூடானுடைய கடந்த முப்பது வருட வரலாற்றை சற்றுத் திரும்பிப் பார்க்க வேண்டும். அந்த வகையில், 1989 ஆம் ஆண்டு இராணுவப் புரட்சிக்கூடாக ஜனாதிபதிப் பதவியை கைப்பற்றிக் கொண்டவர் உமர் பஷீர். அதிலும், ஜனநாயகத் தேர்தலொன்றுக்கூடாக தெரிவு செய்யப்பட்ட ஸாதிக் அல்மஹ்தியின் அரசாங்கத்திற்;கு எதிராகவே இராணுவப் புரட்சி அங்கேற்றப்;பட்டது. இராணுவப் புரட்சியிக்கான நிழல் தலைமைத்துவத்தை வழங்கியவர் அப்போதைய சூடான் இஸ்லாமிய இயக்கத்திற்கு தலைமைத்துவத்தை வழங்கிய கலாநிதி ஹசன் தூரபி. ஆனால், அதனை களத்தில் வழிநடாத்துவதற்கு பொம்மைத் தலைவராக நியமிக்கப்பட்டவர் ஜனரல் உமர் பஷீர் ஆவார். அவருடன் சூடான் இஸ்லாமிய இயக்கத்தின் கொள்கை கோட்பாடுகளுடன் நெருங்கமான உறவைப் பேணிய இராணுவப் பிரிவுகள் இணைந்து கொண்டன.இராணுவப் புரட்சி வெற்றி பெற்றது உண்மை. ஆனால், மேற்சொன்ன நிகழ்வால் ஜனநாயகப் பொறிமுறையொன்றுக்கூடாக தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு இஸ்லாமியவாதியான கலாநிதி ஹசன் தூராபி துணை போனார் என்ற விமர்சனத்திற்கு அவர் ஆளாக வேண்டியதாயிற்று. என்றாலும் கூட, கலாநிதி ஹசன் தூரபி அவர் மரணிப்பதற்கு சில காலங்களுக்கு முன்னர் அளித்த பேட்டியொன்றில் 'ஸாதிக் அல் மஹ்தியின் அரசாங்கத்திற்கு எதிராக ஏற்கனவே பாத் சோஸலிஸக் கொள்கையை ஆதரித்த இராணுவக் குழுவொன்று இராணுவப் புரட்சியை மேற்கொள்வதற்கு தயாராகிக் கொண்டிருக்கும் போதுதான் நிர்ப்பந்தமாக அவரது இஸ்லாமிய இயக்கத்தை ஆதரித்த ஜனரல் உமர் அல்பஷீரை பயன்படுத்தி மற்றொரு இராணுவப் புரட்சியொன்றை மேற்கொள்ள வேண்டியேற்பட்டது. ஏனெனில், அக்கட்டத்தில் இராணுவத்தை எமது கட்டுப்பாட்டுக்குல் கொண்டு வருவதைத் தவிர வேறொரு சரியான தெரிவை நான் காணவில்லை. புரட்சியைத் தொடர்ந்து சூடானை உறுதியான ஜனநாயகப் பொறிமுறையொன்றை நோக்கி வழிநடாத்த வேண்டும் என்பதுதான் எனது அபிப்பிராயமாகவும் திட்டமாகவும் இருந்தது' என்ற கருத்தை தெரிவித்திருந்தார்.
ஆனால், ஆட்சியைக் கைப்பற்றிய உடனே உமர் பஷீருக்கும், ஹசன் தூராபிக்கும் இடையில் அதிகார மோதல் கடுமையாகின. ஆரம்பத்தில், புரட்சியை வெற்றி கொண்டு நாட்டை வழிநடாத்துவதற்காக நியமிக்கப்பட்ட இடைக்கால இராணுவ அரசாங்கத்தில் தீர்மானெடுக்கும் மறைகரமாக இருந்தவர் உஸ்தாத் ஹசன் துராபியும், அவரது இஸ்லாமிய இயக்கமுமாகும். இன்னொரு வகையில் சொன்னால், அக்காலப் பகுதியில் சூடானுடைய கிச்சன் கெபினட்டை (இரகசிய கெபினட்டை) வழிநடாத்தியவராக ஹசன் தூராபி அறியப்பட்டார். அதாவது, புரட்சிக்குப் பிந்திய இராணுவ அரசாங்கமாக அது இருந்த போதிலும் கூட, அறிஞர் ஹசன் தூரபியின் கருத்துச் செல்வாக்கை அவர்களால் தடுக்க முடியவில்லை. ஹசன் துராபியினதும், சூடான் இஸ்லாமிய இயக்கத்தினதும் அதிகரித்த தலையீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கெபினட்டிலிருந்து பல இராணுவ ஜனரலகள் வெளிநடப்பு செய்யுமளவுக்கு நிலைமை சென்றது. எனவே, உமர் பஷீர் மற்றும் அவரது இராணுவ ஜனரல்கள் ஹசன் தூரபியையும், அவரது ஆதரவு வட்டத்தையும் ஒரங்கட்டாமல் அரசாங்கத்தை நடாத்திச் செல்ல முடியாது என்ற நிலைப்பாட்டுக்கு வந்தார்கள். பின்பு, ஹசன் தூராபியை ஒரங்கட்டுவதிலும், அவரை தனிமைப்படுத்துவதிலும் உமர் பஷீர் வெற்றிபெற்றார். இங்குதான், புரட்சிக்குப் பிந்திய இராணுவ அரசாங்கத்தில் தனக்கும், தனது இஸ்லாமிய இயக்கத்திற்கும் செல்வாக்கிருக்கிறது என்ற அடிப்படையில் இராணுவ அரசாங்கத்தை ஜனநாயகப் பொறிமுறையொன்றை நோக்கி அவசரமான நகர்த்துவதில் ஹசன் தூராபி துரிதமாக செயற்படவில்லை. இதுவே, இறுதியில் உமர் பஷிரின் இரும்புக் கரத்தை பலப்படுத்துவதில் சென்று முடிவடைந்தது என சூடான் வரலாற்றாசிரியர்கள் ஹசன துராபியை விமர்சனம் செய்கிறார்கள். இராணுவம் என்ற நெருப்பின் கடுமை தெரியாமல் அதனுடன் ஹசன் தூரபி உறவாடியதாகவும் அவர்கள் மேலும் கோடிட்டுக் காட்டுகிறார்கள்.
ஹசன் துராபி என்ற செல்வாக்கு மனிதரை ஓரம் கட்டுவதில் பெற்ற வெற்றியை தொடர்ந்து அரச நிறுவனங்களையும், தீர்மானமெடுக்கும் பொறிமுறையையும் கட்டம் கட்டமாக தனக்கு விசுவாசமான இராணுவ ஜனரல்களையும், ஏனைய நெருக்கமானவர்களையும் வைத்து நிரப்பும் பணியை கச்சியதமாக செய்து முடித்தார் உமர் பஷீர். மட்டுமன்றி, சூடான் இஸ்லாமிய இயக்கமும் பிளவுபட்டதுன், அதில பெரும்பலானவர்கள் உமர் பஷீருடன் இணைந்து கொண்டார்கள். அதாவது, ஹசன் தூரபி இல்லாத சூடான் இஸ்லாமிய இயக்கம் மிகப் பலவீனமான நிலையில் உமர் பஷீருடன் சோந்து கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும். அதிலிருந்து, சூடான் இஸ்லாமிய இயக்கத்தை தனது சமூக செல்வாக்கை அதிகரிக்கச் செய்து கொள்வதற்கான, மற்றும் இராணுவ ஜனரல்களுக்கான ஏற்பை சமூக மட்டத்தில் பிரபல்யப்படுத்திக் கொள்வதற்கான ஊடகமாக உமர் பஷீர் பயன்படுத்திக் கொண்டார் என்பதே பிரபல அரசியல் ஆய்வாளர்கள் அலி உஸ்மான் பீலுடைய அவதானமாகும். பின்பு, உமர் பஷீருடன் இணைத்து சூடான் இஸ்லாமிய இயக்கமும் பொது மக்கள் தளத்தில் விமர்சிக்கப்பட்டன. இந்த இடத்தில்தான், பேராசிரியர் அப்துல் வஹ்ஹாப் அல் அபந்தி 'சூடான் இஸ்லாமிய இயக்கம் தொடர்பாகவும், இஸ்லாமியவாதம் தொடர்பாகவும் சூடான் மக்கள் மத்தியில் தற்போது நிலவும் வெறுப்பானது செயற்கையாக வெளிநாட்டு சக்திகளால் உருவாக்கப்பட்ட ஒன்றல்ல. மாறாக, உமர் பஷீரின் செயற்பாடுகளாலும், அதனை பலவீனமான நிலையில் ஆதரித்த சூடான இஸ்லாமிய இயக்கத்தின் நிலைப்பாடுகளாலும் இயற்கையாக ஏற்பட்டவை. எனவே, இந்த வெறுப்பை இஸ்லாத்திற்கு எதிரான ஒன்றாக நோக்க முடியாது' என்கிறார். இவையனைத்து நிகழ்வுகளுக்குப் பிறகும், சூடான் இஸ்லாமிய இயக்கத்திற்கும் , உமர் பஷீரின் இராணுவ ஜனரல்களது அரசாங்கத்திற்குமிடையிலான உறவின் திசையை தீர்மானிப்பதில் இராணுவத்தின் கை ஒங்கியிருந்தாலும் கூட, 2000-2011 இடைப்பட்ட காலப்பகுதியில் சூடானுடைய பொருளாதார பலம் அதிகரித்தால், அதனை முகாமை செய்யும் நோக்கில் சூடான் இஸ்லாமிய இயக்கத்தின் சில முக்கிய புள்ளிகள் அரசாங்கத்துடன் தொடர்ந்தும் ஒத்துழைத்தார்கள்.
ஆனால், அரபு வசந்தம் மற்றும் அதனைத் தொடர்ந்து எழுந்த சூடான் அரச பொறிமுறையில் காத்திரமான மாற்றங்கள் இடம்பெற வேண்டும் என்ற கருத்தை சூடான் இஸ்லாமிய இயக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பலர் ஆதரிக்கத் துவங்கினார்கள். சூடான் இஸ்லாமிய இயக்கம் அரச பொறிமுறையை விட்டும் சுதந்திரமாக இயங்க வேண்டும் என்ற அழைப்பும் முன்வைக்கப்பட்டன. இந்த முரண்பாட்டில் எஞ்சியிருந்த சூடான் இஸ்லாமிய இயக்கத்தின் முக்கிய புள்ளிகளும் உமர் பஷீரால் நீக்கப்பட்டனர். இந்த அபிவிருக்தியை அவதானிக்கும் போது , 2010 ஆம் ஆண்டிலிருந்து அரசுடன் இணைந்து பயணிக்கும் சூடான் இஸ்லாமிய இயக்கம் என்பது உமர் பஷீர் தனது தேவைக்கேற்ப வடிவமைத்த இயக்கமாகவே அதனை நோக்கவேண்டும். மறுபுறம், மேறசொன்ன அனைத்து நிகழ்வுகளும் இணைந்து உமர் பஷீர் மற்றும் அவரது உயர்மட்ட இராணுவ ஜனரல்களது பொருளாதார, அரசியல் நலன்களை பாதுகாக்கும், அதனை உத்தரவாதப்படுத்தும் கட்டமைப்பாக தற்போதைய 'சூடான் அரசுசை' மாற்றமடையச் செய்துள்ளன. இராணுவம், விஷேட உளவுப் பிரிவு, தேசிப் பாதுகாப்பு சபை போன்ற நாட்டின் உயர்மட்ட பாதுகாப்புத் துறை நிறுவனங்களும், அதன் இலாப நஷ்ட கணக்குகளும் உமர் பஷீரை சூழவே வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே, உமர் பஷீரீன் வீழ்ச்சி என்பது இராணுவத்தின் வீழ்ச்சியாகும் என்பதே இராணுவத்தின் நம்பிக்கையாகும். இந்தப் பின்புலத்தில், மிக இக்கட்டான கட்டத்திலே அன்றி, உமர் பஷீரை விட்டுக் கொடுப்பதற்கு சூடான் இராணுவம் தயாராக மாட்டாது என்பதே சில அரசியல் பகுப்பாயவாளர்களது கருத்தாகும்.
அதேநேரம், தற்போதைய அரசாங்கத்தை நீண்ட காலமாக இலக்கு வைத்து இயங்கும் தீவிர இடதுசாரிகளினதும், பாத் சோசலிஸ்டுகளினதும் சதி திட்டத்தில் மக்கள் அகப்பட்டுக் கொண்டுள்ளதாக வேறு சில அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிகிறார்கள். குறிப்பாக, சூடானினுடைய அரபு மற்றும் இஸ்லாமியத்துவத்தை தீர்த்துக் கட்டுவதற்கான இறுதிச் சந்தர்ப்பமாக தற்போது நடைபெறும் புரட்சியைக் கருதி, தனது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப மதச்சார்பற்ற சக்திகள் வழிநடாத்தி வருவதாகவும் அவர்கள் மேலும் வாதிக்கிறார்கள். அதாவது, இதுவரை காலமும் உமர் அல்பஷீரின் அரசாங்கத்தையோ அல்லது அவரோடு இணைந்து உழைக்கும் இஸ்லாமிய சக்திகளையோ தேர்தலொன்றுக்கூடாக தோல்வியடைச் செய்வதற்கு மதச்சார்ப்பற்ற சக்திகளால் முடியவில்லை. ஏனெனில், சூடானுடைய இஸ்லாமியத்துவத்தை மற்றும் அரபுத்துவத்தை கேள்விக்குட்படுத்தும் எந்த சக்தியையும் அல்லது அரசியல் நிகழ்ச்சி நிரலையும் அந்நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. எனவே, இந்த உண்மையைப் புரிந்து வைத்துள்ள எதிர்ச்சக்திகள் உமர் பஷீருக்கு எதிரான மக்கள் அலையைப் பயன்படுத்தி, குறுக்கு வழியில் ஆட்சியை கைப்பற்றிக் கொள்வதற்கு முயல்கின்றன என அவர்கள் கோடிட்டுக் காட்டுகினர். இன்னும், சூடானுடைய பொருளாதாரத்தை திட்டமிட்டு நசுக்கியதில் மற்றும் முடங்கச் செய்ததில் மேற்குலக சக்திகளினதும், அமெரிக்காவினதும் சதித் திட்டங்களும், பொருளாத்தடையுமே காரணமாகும். இதனால், நாட்டினுடைய பொருளாதார ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டன. இத்தகைய உண்மைகளை ஒரு புறம் வைத்து விட்டு, வெறுமனே உமர் பஷீரை மாத்திரம் குற்றவாளிக் கூண்டில் நிறுவத்துவதன் மர்மம் என்ன? என்பதே சாமி ஹம்தி போன்ற சில பிரபல அரசியல் பகுப்பாய்வாளர்கள் தொடுக்கும் கேள்வியாகும்.
இறுதியாக, மேற்குலகும், உள்ளக எதிர்ச் சக்திகளும் சூடானைப் பலவீனப்படுத்துவதற்கு முயற்சி செய்வதனை மறுக்க முடியாது. அந்த வகையிலேயே ஏகாதிபத்திய நாடுகள் அதன் மீது விதித்த பொருளாதாரத் தடை ஏற்படுத்திய பாதிப்புகள் ஆழமானவை. ஆனால், ஏற்கனவே 30 வருடங்கள் சூடானை ஆட்சி செய்துள்ள உமர் பஷீரும் அவரது அராசாங்கமும், இன்னும் பத்து வருடங்கள் அதிகாரபீடத்தில் இருப்பதற்கு எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது. மட்டுமன்றி, தன்னையும், தனது அராசாஙகத்தை எதிர்ப்பதனை 'இஸ்லாத்தை மற்றும் இஸ்லாமியத்துவத்தை' எதிர்ப்பதாக காட்சிப்படுத்துவதனை ஏற்றுக் கொள்ள முடியாது அல்லது அந்த நியாயத்தைச் சொல்லி தனது அரசாங்கத்தின் மூன்று தசாப்த கால ஊழல்களிருந்தும், தோல்விகளிருந்தும் தப்பிக் கொள்ளவும் முடியாது. இந்தப் பின்னணியில், இஸ்லாத்தையும், இஸ்லாமியத்துவத்தையும் ஆதரிப்பவர்கள் மற்றும் ஆதரிக்காதவர்கள் என்ற நோக்கில் ஆர்ப்பாட்டக்காரர்களை உமர் பஷீர் கையாள்வது சூடானை, அதன், ஒருமைப்பாட்டை இன்னும் கடுமையாகப் பாதிக்கப் போகிறதே தவிர, அதனை சரியான திசையில் செலுத்தப் போவதில்லை. சர்வதேச ரீதியாகவும், பிராந்திய ரீதியாகவும் சூடான் எதிர்கொண்ட பல்வேறு அரசியல் சிக்கல்களுக்கு உமர் பஷீரின் சுயநல அரசியல் அணுகுமுறைகளும் ஒரு பிரதான காரணமாகும் என்ற ஆய்வாளர் அஸாம் தமீமியின் அவதானத்தை ஞாபகப்படுத்திக் கொள்வதும் முக்கியமுமானது. இவ்வாறு, எந்த சமன்பாட்டின் மீது நின்று பகுப்பாய்வு செய்தாலும், இந்த சந்தர்ப்பத்தில் சுமுகமானதொரு ஜனநாயகத் தேர்தலொன்றையும், சூடானை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வதற்கான பொறிமுறையையும் உத்தரவாதப்படுத்துவதே உமர் பஷீரும், அவருடைய கட்சியும், அரசாங்கமும் எடுக்க வேண்டிய பொருத்தமான முடிவுகளாகவே தென்படுகிறது.
ஸகி பவ்ஸ்