வடக்கு முஸ்லிம்களின் அபிவிருத்திக்கென உருவான மீள்குடியேற்ற செயலணியும் அரசியலும் !
Descriptions
ஆக்கம்: ஜீ
சிலாவத்துறை நகர அபிவிருத்தி என பெயர் குறிப்பிட்டு பாராளுமன்றத்தில் பேசப்பட்ட விடயம் மன்னார் நகரம், சிலாவத்துறை நகரம் அபிவிருத்தி பற்றியதாகும் என்பதை அனைவரும் அறிவர். மன்னாரில் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டம் நடைபெற்று முடிவுறும் தருவாயில் முசலி சிலாவத்துறையின் நகர நிர்மாணப்பணிகள் ஆரம்ப கள ஆய்வுகளைக்கூட காணவில்லை. இன்னும் வருடம் முடிவதற்கு சில நாட்கள் உள்ள நிலையில் அடுத்த தேர்தலில் சோடிக்கப்படவுள்ள காரணங்கள் என்னதான் என்று பலர் அங்கலாய்க்கின்றனர்.
அது போன்று சிலாவத்துறை மீனவ துறைமுகத்திற்கு 2017 பட்ஜட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் 2018 பட்ஜட்டில் கடல்வள ஆய்வு பல்கலைக்கழகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் ஒரு கட்சி மேடைக்கு மேடை கூறிவந்தது. அப்போது அவை எங்கே?
இன்னுமொரு கட்சி முசலிக்கான பாரிய குடிநீர்த்திட்டம் (வியாயடி), பல விளையாட்டு மைதானங்கள் என்று உரத்துக் கூறியது. ஆனால், இதுவரை எதுவித முன்னேற்றமும் காணப்படல்லை. இவ்வாறுதான் முசலி வாக்காளர்கள் அரசியல் ரீதியாக ஏமாற்றப்படுகிறார்கள் என்பது தெரியவருகிறது.
மீள்குடியேற்றச் செயலணி வடக்கில் உள்ள முஸ்லிம் சிங்களவர்களின் வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக விசேடமாக உருவாக்கப்பட்ட ஒன்றாகும். அதில் குறிப்பிட்ட ஒரு அமைச்சரின் பங்களிப்பு முக்கியமானது. ஆனால் இந்த செயலணியின் நிதியை பல வருடங்களுக்கு பாவிக்கமுடியாது குறிப்பிட்ட காலத்துக்கே விசேட செயலணியாக தொழிற்படலாம் என்ற கால நியதியும் உண்டு. ஆனால், இன்று அந்த செயலனி ஊடான நிதி வடமாகாண முஸ்லிம் கிராமங்களுக்கு மட்டுமல்லாது கட்சியை வளர்ப்பதற்க்காக அரசியல் செல்வாக்கை பெறுவதற்காக
வன்னியில் உள்ள அனைத்து தமிழ் கிராமங்களுக்கும் பங்கிடப்பட்டு வருகிறது. மேலும் புத்தளம், அம்பாறை, குறுநாகல், அனுராதபுரம், மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் நாட்டின் பல இடங்களுக்கு கட்சியின் வேலைத்திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டு யாருக்காக எந்த மக்களுக்காக எந்த பிரதேசத்துக்காக உரிமைகோரி உருவாக்கப்பட்டதோ அதை மறந்து அந்த செயலணி கையாளப்படுவது வேதனைக்குறியதாகும்.
இவ்வாறு பயன்படுத்தும் போது முசலி மட்டுமல்லாது வன்னிமாவட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகள் தேவைகள் குறுகிய காலத்துக்குள் எவ்வாறு நிறைவு செய்யப்படும்?
உதாரணமாக, மொத்தமாக, ஒரு கிராமத்தில் உள்ளக விதிகள் 7 km புனரமைப்பு செய்யவேண்டி இருந்தால் இவ்வருடம் ஒதுக்கப்பட்டது 100 மீற்றர், 200 மீற்றர்கள் மாத்திரம் தான். எனவே எல்லாப்பாதைகளையும் செய்துமுடிக்க 15 வருடங்கள் தேவைப்படும். இவ்வாறுதான் ஒவ்வொன்றும் விசேடமாக யாரைக்காட்டி எம்மக்களை காட்டி எங்களின் தேவைகளை விசேடமாக நிறைவு செய்வதற்கான நோக்கில் மீள்குடியேற்ற செயலணி பெற்றுக் கொள்ளப்பட்டதோ அது இன்று தடம் மாறி அரைகுறை அபிவிருத்தியுடன் அரசியல் சாதகத்தன்மையுடன் கட்சியை வளர்க்க பாவிக்கப்படுவது கண்டிக்கத்தக்கதாகும்.
இவை யாருக்கு எந்தப்பிரதேசத்துக்கு எம்மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது?. திட்ட மிட்ட வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு விசேடமாக உருவாக்கப்பட்ட குறிக்கோளை முழுமையாக அடைவதில்தான் பிரதேசமும் இந்த மக்களும் நன்மையடைவார்கள். மேலும் இது கட்சியை இலங்கையில் வளர்ப்பதற்கு உருவாக்கப்பட்டு கபினட்டில் அனுமதி பெறப்பட்டதல்ல என்பதனை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினர் திரு காதர் மஸ்தான் அவர்கள் 250 Million நிதியை எடுத்துவிட்டார் என்ற சமகால விமர்சனம் பலரால் பதிவேற்றப்பட்டு வருகிறது. ஆனால் வடக்கு முஸ்லிம் , சிங்களவர்களுக்காக உருவாக்கப்பட்ட செயலணியில் இருந்து/ பல மில்லியன் இப்பிரதேச மக்களின் பணத்தில் இருந்து ஏனைய இனத்தவர்களுக்கும், ஏனைய மாவட்டங்களுக்கும் பங்கிடப்பட்டுள்ளமை குறித்து எவரும் பெரிதாக விமர்சிக்கவில்லை ஏன்?. எங்கு நீதி நியாயம் இருக்கின்றது என்பது யோசிக்க வேண்டியுள்ளது!!.
தாங்கள் செய்வது தாங்களின் கட்சிக்காரர்கள் செய்வது சரி என்றும் ஏனையவர்கள் செய்வது பிழையென்றும் விமர்சிப்பது எவ்வகையில் நியாயம்? நான் எந்தக்கட்சிக்கும் சார்பாக எதிராக பதிவிடவில்லை. உண்மையை உரைக்கின்றேன். தேடலில்லாத பதிவுகளும் , விமர்சனங்களும் உண்மையை மறைக்கும்.
நீதியாக, நேர்மையாக, உண்மையாக, வெளிப்படையாக, அபிவிருத்திட்டங்களோ, அது சம்பந்தமான திட்டங்களோ தீட்டப்பட வேண்டும். மறைமுகமான சில செயற்பாடுகள் முசலியில் யாவருக்கும் பொருந்தாது என்பதையும் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். முசலி மக்களின் அபிவிருத்திக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் உள்ளுர் அரசியல்வாதிகள் அரசியல் காய் நகர்த்தளை மேற்கொள்ளாமல் ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்துகின்றேன்.